குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே பழமையான அரசமரம் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே ராதா நகர் ஜிஎஸ்டி சாலை இணைக்கும் ரயில்வே சுரங்க பாதை பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விரைவாக இந்த பணிகளை முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுரங்க பாலம் செல்லும் வழியில் இருந்த 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரச மரத்தை இரவோடு இரவாக வெட்டி அகற்றி விட்டனர்.
குரோம்பேட்டை ரயில் நிலையத்திற்கு நிழல் தந்த இந்த மரம் வெட்டப்பட்டதற்கு இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது வெட்டப்பட்ட மரத்தை வேறு இடத்தில் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் பசுமை தாயகம் அமைப்பு சார்பில் அரசமரம் வெட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மத்திய அமைச்சர்
ஏ கே மூர்த்தி தலைமையில் குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே மரம் வெட்டப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
அதன்பிறகு வெட்டப்பட்ட அரச மரத்திற்கு மாலை போட்டு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி பசுமைத்தாயகம் அமைப்பினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
வெட்டப்பட்ட அரச மரத்திற்கு பதிலாக 100 மரங்களை தமிழக அரசு நட வேண்டும் அரச மரத்தை வேறு இடத்தில் மாற்றி அதற்கு உயிர் அளிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஏ கே மூர்த்தி கோரிக்கை விடுத்தார்.